Sunday 12 September, 2010

திரைப்படப் பின்னணிப் பாடகி சொர்ணலதா மரணம்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி சொர்ணலதா இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 37.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சொர்ணலதா. கடந்த 1989ம் ஆண்டு முதல் பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார். தாய் மொழியான மலையாளம் , தமிழ், கன்னடம், தெலுங்கு , இந்தி, உருது, படகா ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் நிறையப் பாடல்களைப் பாடியுள்ளார்.
1989-லிருந்து மேடைகளில் பாடி வந்தாலும், கேப்டன் பிரபாகரன் படத்தில் 'ஆட்டமா தேரோட்டமா...' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சொர்ணலதா. சத்ரியன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் 'மாலையில் யாரோ மனதோடு பேச...' என்ற பாடலைப் பாடியதன் மூலம் பிரபலமானவர் சொர்ணலதா.
அதன் பிறகு சின்னத்தம்பி, சின்னவர், சின்ன ஜமீன், குருசிஷ்யன், தளபதி, வள்ளி, வீரா, என் மன வானில் என ஏராளமான படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'போறாளே பொன்னுத்தாயி...' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. பாடல் பாடுவது தவிர கீ போர்ட், ஹார்மோனியம் வாசிப்பதிலும் வல்லவர் சொர்ணலதா.

No comments:

Post a Comment