Wednesday 7 October, 2009

நோபல் பரிசை வென்ற 3வது தமிழர் வெங்கி!

சென்னை: நோபல் பரிசைப் பெற்ற 3வது தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் வெங்கி ராமகிருஷ்ணன் எனப்படும் வெங்கடராமன் ராமகிருஷ்ணன்.
தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர் ராமகிருஷ்ணன்.
1971ம் ஆண்டு இயற்பியலில் பிஎஸ்சி முடித்த இவர் 1976ம் ஆண்டு பரோடா பல்கலைக்கழகத்தி்ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
இயற்பியல் பயின்றவர் என்றாலும் உயிரியல் துறையிலும் பெரும் மூளை கொண்ட ராமகிருஷ்ணன், அந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றிய இவர் செல்கள் தொடர்பான தனது ஆராய்ச்சிகளை துவக்கினார்.
இப்போது லண்டனின் எம்ஆர்சி மாலிகுலார் பயாலஜி ஆய்வகத்தில் தலைமை விஞ்ஞானியாக உள்ள இவர் நோபல் பரிசை வென்றுள்ளார்.
இதற்கு முன்பு சர். சந்திரசகேர வெங்கட்ராமன் (சர். சி.வி. ராமன்) 1930ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். புகழ் பெற்ற ராமன் விளைவுக்காக அவருக்கு இந்தப் பரிசு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு இயற்பியல் பிரிவில் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசைப் பெற்றார். இவர் சர்.சி.வி.ராமனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2009ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வென்றுள்ளார்.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தற்போது அமெரிக்க குடிமகனாக இருப்பதால் அமெரிக்கராகத்தான் கருதப்படுவார்.
இந்தியாவில்...
இந்தியாவில் இதுவரை ரவீந்திர நாத் தாகூர், சர் சி.வி. ராமன், ஹர்கோபிந்த் சிங் குராணா, சுப்ரமணியன் சந்திரசேகர், அன்னை தெரசா, அமார்த்யா சென், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் நோபல் பரிசினை வென்றுள்ளனர்.

No comments:

Post a Comment