Tuesday 2 June, 2009

Movie review - Pasanga


Director- Pandiraj
Producer - Company Productions
Music - James Vasanth
Cast - Kishore, Sriram, Dharani, Pandian, Murugesh

Rate -
கடலை போடுகிற விடலை பசங்க வரைக்கும் 'Down' லோடு ஆன தமிழ் சினிமா, அட... அதுக்கும் 'கீழே' ஒரு கதை இருக்குய்யான்னு உள்ளார பூந்து வூடு கட்டி அடிச்சிருக்கு! பசங்களை மட்டுமல்ல, பச்ச புள்ளங்களையும் நடிக்க வச்ச பாண்டிராஜுக்கு போடுய்யா ஒரு "கண்ணுபட போகுதய்யா சின்ன கவுண்டரே...."
அதிக பட்சம் போனா அஞ்சாம்ப்பூ படிக்குங்களா, அதுங்க? என்னா வில்லத்தனம்...? அசலு£ரில் இருந்து படிக்க வரும் அன்புக்கரசுக்கும், உள்ளூரில் படிக்கும் வாத்தியாரு மகன் ஜீவா நித்தியானந்தத்துக்கும் 'உன்ன புடி... என்ன புடி... சண்ட' படம் முழுக்க! விட்டா பெரியவங்க ரேஞ்சுக்கு ரோப் கட்டி பாய்வாங்க போலிருக்கு. இந்த வாண்டுங்க போட்ட போடுலே, எதிரெதிர் வீட்டு பெரியவங்க வேட்டிய மடிச்சுக் கட்டிகிட்டு நிற்கிற அளவுக்கு போர் உச்சக்கட்டம். கடைசியா அவங்களே ஒன்னு சேர்ந்த பிறகும், விலகி நிக்கிற இந்த பொடியன்களை விதி சேர்த்து வைக்குது. எப்படி? க்ளைமாக்ஸ்.
ஈர வெறக அடுப்பிலே போட்டுட்டு, மாரு வலிக்க ஊதுன கதையா இல்லாம, சும்மா ஜிவ்வுன்னு பத்த வச்சு, சர்ர்ர்ருன்னு சமையலை முடிக்கிறாரு இயக்குனர் பாண்டிராஜ். படம் முழுக்க வந்து விழும் நகைச்சுவையும் நையாண்டியும் இருக்கே, கைய குடுங்க மக்கா!
பிடிக்காதவங்க படத்தை சுவத்திலே வரைஞ்சு அதிலே ஒண்ணுக்கு அடிக்கும் 'பார்பேரியன் படவாஸ்கள்' ஒரு பக்கம். பரீட்சை பேப்பர் வாங்குற நேரத்திலும், "கைதட்டி என்கரேஜ் பண்ணி குடுங்க சார். அப்போதான் அடுத்த பரிட்சையிலே இன்னும் மார்க் வாங்க முடியும்"னு வாத்தியாருக்கே பாடம் எடுக்கிற வெஜிட்டேரியன் வெள்ளக்காரன் அன்புக்கரசு மறுபக்கம்னு ஒரே டஃப் கேம். ஸ்கூல் லீடர் யார் என்பதில் போட்டி பெரிசாகி, கோவிலில் அன்புக்கரசுக்கு எதிராக காசு வெட்டி போடுகிற அளவுக்கு கொடுமை கடுமையாகிறது. (காசு வெட்டி போட்ருவோமான்னு அடிக்கடி கண்ணை உருட்டுகிற அந்த படவா ராஸ்கோல் பயங்கரம்) ஸ்கூலில் இவங்க ரவுசு என்றால், வீட்டில் அப்பா அம்மா சண்டை. அது குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்குது என்பதையும் பொட்டில் அறைஞ்ச மாதரி நச்சுன்னு சொல்லியிருக்காரு பாண்டிராஜ்.
இதற்கு இடையில் எல்.ஐ.சி விமலுக்கும் பாலர் ஸ்கூல் வேகாவுக்கும் நடுவே லவ். (அடடா, இவங்க லவ்வுல என்னா ஒரு சுவாரஸ்யம்?) வெந்தும் வேகாம நடிக்கிற நடிகைகளுக்கு மத்தியில் வேகாவின் நடிப்புக்கு நெசமாகவே ஒரு ஆஹா! பஸ்சிலே ஒரு செருப்பை தவற விடும் விமலுடைய செருப்பை அப்படியே ரோட்டோரமாகவே உதைத்துக் கொண்டு வந்து சேர்க்கும் வேகா, "ஒத்த செருப்ப போட்டு நடந்தா ஒத்த புள்ள பொறக்குமாம்"னு விளக்கம் சொல்ல, அடுத்தடுத்த சந்திப்புகளிலேயே லவ். வேகாவோட வெள்ளந்தி மனசுக்கு தோதாக விமல் அடிக்கும் செல்போன் ராவடிகளில் தியேட்டரே கலகல. ஃபிரண்டுக்கு 2000 ரூபா கடன் கொடுத்த அடுத்த வினாடியே ஏகப்பட்ட போன் கால்ஸ். "உங்க இளகிய மனசுக்கு ரோட்டரி கிளப் விருது கொடுக்க போவுதாம்"னு எடுத்துவிட, அதையும் நம்பும் வேகாவுக்கு, "யாரோ உன்னை ஓட்டுறாங்கடி"ன்னு ஃபிரண்ட் போட்டுக் கொடுக்கிற வரைக்கும் தெரியலே. நம்மையே நம்ப வைக்கிற மாதிரி முகம்தான் வேகாவுக்கும்.
"இங்க மீனாட்சி. அங்கே யாரு"ன்னு அசால்டாக மொக்கை போடும் விமலுக்கு சினிமா கதவை அகல திறந்து வைங்கய்யா. "போற போக்க பார்த்தா நம்மளை சேர்த்து வைக்க மாட்டாய்ங்க போலருக்கு. பழகின பழக்கத்துக்கு ஒரு எல்ஐசியாவது போடேன்"னு இவரு கேட்கிற போது தியேட்டரே 'சிரிப்பொலி' ஆகிறது.
தமிழ் சினிமாவின் இன்னொரு பிரகாஷ்ராஜ்னு பாராட்டலாம் வாத்தியாரு ஜெயப்பிரகாஷை. வீட்டு சண்டை வீட்டோடு என்ற பெருந்தன்மையோடு மாணவனிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் அருமை. சிறு புருவத்திலும் நடிப்பை தேக்கி காட்டும் லாவகத்திலும் அசத்துராரு வாத்தியாரு. யாருய்யா அந்த போதும் பொண்ணு? குணச்சித்திர வேடத்துக்கு பொருத்தமாக கிடைச்சிருக்கும் குணசுந்தரி! நடிக்க வந்த எல்லா பொடிசுகளுக்கும் ஒரு உற்சாக உம்மா!
நடுரோட்டிலே முன்னேறி வந்து இரண்டு குடும்பமும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, நடுவிலே புகுந்து போகும் 'அறிவிப்பு ஆட்டோ' ஒன்று "ஓரமாக நின்று சண்டை போடும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" என்று ஒலிபெருக்குகிறது. இது மாதிரி படம் நெடுகிலும் ஏராளமான நகைச்சுவை பொட்டலங்கள்! ஆனால் இடைவேளைக்கு பிறகு 'திடீர் விக்ரமன்' ஆகி சென்ட்டிமென்ட்டை போட்டு தாக்கும்போதுதான் "என்ன வாத்தியாரே, என்னாச்சு?" என்று கேட்க வைக்கிறார் பாண்டி!
குழந்தைகளின் உலகமும், கலகமும் சிலேட்டு மாதிரி. எழுதிய அடுத்த வினாடிகளில் அழிக்கப்பட்டு விடலாம். ஆனால், ஜீவா நித்தியானந்தத்தின் கேரக்டரை ஒரு மினியேச்சர் நம்பியாராக தொடர்வதுதான் கொஞ்சம் நெருடல்!
ஜேம்ஸ் வசந்தனின் இசையும், பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் கச்சிதம். யோக பாஸ்கர் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
தியேட்டருக்குள்ளே வந்த எல்லாரையும் அவரவர் கால்சட்டை உலகத்திற்கு திரும்பி போக வைக்கிறார் இயக்குனர். அதுதான் படத்தின் வெற்றியும் கூட!

No comments:

Post a Comment